ஜம்பை - பகுதி 2 - ஜம்புநாதேசுவரர் கோயில்

சிறப்புகள் 


  • சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் விரிவாக்கப்பட்ட பழமையான கோயில்.
  • ராஷ்டிரகூடர்கள் கால அழகிய சிற்பங்கள் 
  • கல்வெட்டுகள் 

பயணம் 


பயண விவரங்களை ஜம்பை - பகுதி 1 - ஜம்பை மலை இடுகையில் காணவும். ஊருக்குள் சாலையின் ஒரு வளைவில் இடது புறமாக திரும்பும் தெருவில் உள்ளது ஜம்புநாதேசுவரர் கோயில்.

கோயில் அமைப்பு


கோயில் புனரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையடையாத நிலையில் கலசங்கள் இல்லாத விமானங்கள், முறையாக நிறுவப்படாத இறைத் திருவுருவங்கள், புல் புதர் மண்டிக் கிடக்கும் தரை, புனரமைப்புக்காக காத்திருக்கும் பகுதிகள் என்று  இருந்தாலும் வழிபாட்டில் உள்ளது. சில பெண்கள் வந்து அம்மனுக்கு விளக்கேற்றி விட்டுச் சென்றனர்.

வெளித் திருச்சுற்று 


இரு மதில்கள், இரு கோபுரங்கள், இரு திருச்சுற்றுகள் கொண்ட கோயில். வெளி கோபுரம் தரைத் தளம் மட்டுமே கொண்ட மொட்டை கோபுரம்.

வெளி கோபுரம் - உட்புறமிருந்து

வெளி திருச்சுற்றில் மேற்கே கோபுரத்தின் வலது புறம் கிழக்கு நோக்கிய அம்மன் திருமுன். அதன் முன் அம்மனது நந்திக்கான மண்டபம். அதை அடுத்து சிவன் கோயிலில் உள் மதிலும் அதன் கிழக்கில் கோபுரமும். அதன் முன் கொடிமரம், பலிபீடம். திருச்சுற்றின் கிழக்கில் வடக்கிலும் தெற்கிலுமாக இரு மண்டபங்கள்.  தெற்கு மதில் சுவரை ஒட்டி வடக்கு நோக்கிய ஒரு மண்டபத்தில் விநாயகர் எழுந்தருளி உள்ளார்.

வெளித்  திருச்சுற்று
(இடமிருந்து வலமாக) தென் மேற்கு மண்டபம், பலி பீடம், கோடி மரம், விநாயகர் மண்டபம், சிவன் கோயில் கிழக்கு கோபுரம், அம்மன் நந்தி, சிவன் கோயில் உள் மதில்  
  
வட மேற்கு மண்டபம் 

உள் திருச்சுற்று 


மதிலில் கிழக்கே ஒரு மூன்று நிலை கோபுரம். பிரதிபந்த தாங்குதளம். நிலைத்தூண்களில் கொடிப்பெண்களும் மேலே கொடி வளைவுகளுக்கு உள்ளே சிற்பங்களும் உள்ளன.

கிழக்கு கோபுரம்


பிரதிபந்த தாங்குதளம் 
நிலைத்தூண் 


உள் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில்  முழுவதுமாக முன் மண்டபம் அமைந்துள்ளது. அதன் கிழக்கு, வடக்கு, தெற்கு மூன்று புறங்களும் உயர்ந்த தளங்களுடன் மேடை அல்லது மண்டபங்களாக உள்ளன. மேற்கே சிவன் திருமுன்.

கோபுரத்தின் உள் நுழைந்ததும் இரு புறமும் உள்ள மேடைகளின் மூலைகளில் இரு சிங்கத் தூண்கள்.

வாசல் மேடைகள், சிங்கத்தூண்கள் 

சிங்கத் தூண் - பக்கப் பார்வை 

வட பகுதி அகன்ற மேடையுடன் உயர்ந்த தளத்துடன் தனி மண்டபமாக உள்ளது. 

உள் திருச்சுற்று - மேற்கு மண்டபம் 

தெற்கிலும் ஒரு சிறு மண்டபம் அறையாக தடுக்கப்பட்டுள்ளது. சிவன் திருமுன்னனின் இருபுறமும் வடக்கிலும், தெற்கிலும் இரு வாயில்கள்.  அவை திருமுன்னின் மற்ற மூன்று பக்கங்களில் (தெற்கு, மேற்கு, வடக்கு) உள்ள திறந்தவெளி உள் திருச்சுற்றில் திறக்கின்றன. திறந்தவெளி உள் திருச்சுற்றின் பக்கத்தில் மதிலை ஒட்டி மூன்று புறமும் தொடர்ச்சியான மண்டபம்.



தெற்கு உள் திருச்சுற்று 
வடக்கு உள் திருச்சுற்று 


தெற்கு, வடக்குத் திருச்சுற்று மண்டபங்கள் ஒரு வரிசைத் தூண்கள் பெற்று விளங்க, மேற்குத் திருச்சுற்று மண்டபம் இரு வரிசைத் தூண்கள் கொண்டுள்ளது. அதில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

மேற்குத் திருச்சுற்று மண்டபம் 

விமானம் 


சிவன் திருமுன் பராந்தக சோழன் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. இரு தள விமானம், அர்த்த மண்டபம், இடைநாழி, முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இருத்தள விமானம்
தரைத் தளம் கருங்கல் கட்டுமானம். மேலே செங்கல் கட்டுமானம்.

விமானம் - தெற்குப் பார்வை 


விமான தாங்குதளம்

மேல் உறுப்புகள் 

முக மண்டபம் 

இடைநாழி வாசல் 

அர்த்த மண்டபமம் கருவறையும் 

அம்மன் திருமுன் 


கிழக்கு நோக்கிய அகிலாண்டேசுவரி அம்மன் திருமுன் முன் மண்டபம், முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை விமானம் பெற்று விளங்குகிறது.

அகிலாண்டேசுவரி அம்மன் திருமுன் 

முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை

சிற்பங்கள் 


சிவன் கோயில் கருவறைக் கோட்டங்கள் 


தட்சிணாமூர்த்தி 

மேற்கே லிங்கோத்பவர் 

வடக்கே நான்முகன் 

சிவன் கோயில் வாயிற்காவலர்கள் 


முன் மண்டபம் 
முன் மண்டபம் 
அர்த்த மண்டபம் 
அர்த்த மண்டபம் 

மேற்குத் திருச்சுற்று மண்டபம் 


மேற்குத் திருச்சுற்றில் பல அழகிய இறைஉருவங்கள் தற்காலிகமாக கிழக்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளன.

வலம்புரி விநாயகர்

திருமகள், திருமால், நிலமகள் 

முருகர்
வலக்கையில் சக்தி ஆயுதமும், பின் இடக்கையில் மின் படையும் (வஜ்ஜிராயுதம்) ஏந்துவது மரபு. இங்கு மாறியுள்ளது.

வள்ளி, முருகர், தெய்வானை
இங்கும் முருகர் பின்கைகளில் ஆயுதங்கள் இடம் மாறியுள்ளன.

பிட்சாடனர் 

அமைதி தளும்பும் அழகிய திருமுகம். இடது கால் நேராகவும், வலது கால் சற்று வளைந்தும் ஒயிலானத் தோற்றம். இடது பின்கரம் மேல்நோக்கி வளைந்து மண்டையோடு ஏந்துகிறது.   வலது பின்கரம் உடைந்து உள்ளது. வலது முன் கையை ஒரு உருள்தடி மீது வைத்துள்ளார். இடது முன் கை வழங்கும் கையாக (வர ஹஸ்தம்) உள்ளது. 

சடை பாரத்தை நாகம் ஒன்று கட்டித்  தலைக்கு மேல் படம் தூக்கி மணி முடி போல் அழகாக அமைந்துள்ளது. காதில் குண்டலங்கள். கழுத்தில் இரு கண்டிகைகள். கழுத்தைச் சுற்றிய நாகம் ஒன்று மார்பில்  முடிச்சிட்டு   தொங்குகிறது.   முப்புரிநூல். மூன்று சுற்று தோள் வளைகள். இரு சுற்று கை வளைகள். உதர பந்தத்தின் அடையாளம் தெரிகிறது. இடையில் மறைப்பற்ற ஆணுறுப்புகளுக்கு மேலாக மணிகள் தொங்கும் மணிச்சரம்.  கணுக்கால்களில் தண்டைகள். 

தலையிலும் கழுத்திலும் உள்ள நாகங்கள் தவிர உருள்தடியின் அடிப்பகத்தைச் சுற்றி நடுப்பகுதியில் தலை காட்டும் நாகம் ஒன்று. இன்னொரு நாகம் தடியின் மேல் பாகத்தைச் சுற்றிக்கொண்டு அவரது தொடை, இடுப்பின் பக்கத்தில் தவழ்கிறது. மற்றொரு நாகம் வலது முழங்கையில் இருந்து தொடைகளுக்கு குறுக்காக மாலை போல் தொங்குகிறது. அவர் இடக்கையில் இருந்து வால் மேலாக தலை கீழாக ஒரு நாகம் தொங்க, இன்னொன்று அதன் கழுத்தில் பிணைந்து சுருளாகத் தொங்குகிறது. 

சிவ லிங்கம் 

ஜேஷ்டா தேவி
பின்னால் காக்கைக் கொடியும் பக்கத்தில் காளை முகத்துடன் மந்தனும்


ஜேஷ்டா தேவி பற்றிய விவரங்களை இங்கே காணவும்: ஜேஷ்டா தேவி 


முன்மண்டபச் சிற்பங்கள் 


மகிஷாசுரமர்த்தினி

துர்க்கையின் இந்த மகிஷாசுரமர்த்தினி சிலை பரவசத்தில் ஆழ்த்தும் அழகிய படிமம். தனித்த இறை வடிவங்களின் மீது ஆகமங்களின் கட்டுப்பாடு சிற்பியின் கற்பனைக்குப் பெரிதும் கடிவாளம் இடுகிறது. ஆனால் இது போன்ற செயல்நிலைச் சிற்பங்கள் சிற்பிக்கு அதிக சுதந்திரம் அளிப்பதால் மாறுபட்ட சிறப்பான சிற்பங்களைப் படைக்க முடிகிறது.

மகிஷாசுரமர்த்தினி
நன்றி:  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முகநூல் பக்கம்


இது ராஷ்டிரகூட கலைப்பாணி எனப்படுகிறது. துர்க்கை காளை உருவ மகிஷனை வதம் செய்யும் காட்சி. கூட துர்க்கையின் வாகனமான சிங்கம். துர்க்கை வலது காலை நிலத்தில் மடிந்துள்ள மகிஷனின் வலதுகால் மீது ஊன்றி, இடது காலை அவன் தோள் மீது வைத்து அழுத்தி, இடது கீழ்க்கையால் அவன் நாக்கைப் பற்றி வெளியிழுத்து தலையை மேல் நோக்கித் திருப்பி, இடது கையில் ஏந்திய சூலத்தால் அவன் முதுகில் குத்துகிறாள். வலது மூன்றாம் கையில் வாள் அசுரன் தலையைத் துண்டிக்க ஓங்கியுள்ளது. எதிர் இடது கையில் கேடயம். வலது இரண்டாம் கையில் ஆழி வீசப்படும் நிலையில் (பிரயோக சக்ரம்) உள்ளது. எதிர் இடது கையில் ஓங்கிய வில். மேல் வலது கை வில்லில் பொறுத்திச் செலுத்த அம்பறாத்தூணியில் இருந்து அம்பு ஒன்றை உருவுகிறது. எதிர் இடது மேல் கை வெற்றி முழக்கமிட சங்கை ஓங்கி உள்ளது. இருகைகளில் வாளும் கேடயமும் ஏந்திய அவுணன் ஆற்றலிழந்து மரணத்தின் விளிம்பில் தவிக்கிறான்.

அன்னையின் முகம் கம்பீரமும் கடுமையும் காட்டுகிறது. அவள்  அழகிய உருவம் தலை முதல் கால் வரை உள்ள அணிகளாலும், இடை ஆடையாலும் பொலிவுறுகிறது.

சேணம் தாங்கிய சிம்மம் அன்னையின் கோபக்கனல் கண்டு அஞ்சி எதிர்புறம் முகம் திருப்பியுள்ளது.

அம்மன் 

நந்தி 

சந்திரன் 

தலைச் சுற்றி ஒளிவட்டம் கொண்டு இருகைகளில் மலர் ஏந்திய கோலம் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உரியது. சூரியன் ஏந்தும் மலர் தாமரை. சந்திரன் ஏந்தும் மலர் அல்லி. சூரியன் கிழக்கு நோக்க சந்திரன் திசை மேற்கு. இங்கு ஆம்பல் ஏந்திய சந்திரன் மேற்கு நோக்கி அமைந்துள்ளான்.

உள் திருச்சுற்று வெட்டவெளியில் 


விநாயகர் - வடக்கு பாகத்தில் கிழக்கு நோக்கி 

சண்டிகேசுவரர் - வடக்குப் பகுதி
சுகாசனம், ஜடாமண்டலம், மழு  (கோடாலி, பரசு)

வெளி திருச்சுற்று - வெட்டவெளியில் 


நடுகற்கள் 



அம்மன் சந்நிதி 




புரவித் தூண் 
புரவித் தூண் 


துவாரபாலகி
ஆழி, சங்கு, சிம்மம்
துவாரபாலகி
உடைந்த வலது கை ஆயுதம்,
இடது கைப்  பாசம், யாளி   


அகிலாண்டேசுவரி அம்மன் 

தூண் சிற்பம் 

கல்வெட்டுகள் # *


கல்வெட்டுகள் 

திருமுன் சுவர் , தாங்குதளம், உள்  கோபுர அதிட்டானம் எனப் பல இடங்களில் கல்வெட்டுகள் நிறைந்துக்  காணப்படுகின்றன. முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டுகள் இந்த கோயிலின் காலத்தை 10 ஆம் நூற்றாண்டாக நிறுவுகிறது. அவனைத் தக்கோலம் போரில் தோற்கடித்து இப்பகுதியை ஆண்ட ராஷ்டிரகூடர்கள், கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் கல்வெட்டுகள் காணப்படுகின்றனவாம்.மகிஷாசுரமர்த்தினி, முருகர், பிச்சாண்டவர், ஜேஷ்டா தேவி சிற்பங்கள் ராஷ்டிரகூட பாணியில் ஆனவை எனப்படுகிறது. கல்வெட்டுகளில் இவ்வூர் வாலையூர் என்றும் இறைவன் தான்தோண்றிசுவரர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

நீருக்கடியில் இருந்த இந்த லிங்கத்தை ஒரு மீன் சுற்றிக்கொண்டு இருக்கும்போது அரச யானை தெரியாமல் இடையூறு செய்ய மீன் யானையின் துதிக்கையை வாலால் அடித்து காயம் ஏற்பட்டது. உதிர காயத்தின் காரணம் ஆராய்ந்த மன்னன் லிங்கத்தைக் கண்டெடுத்து நிறுவி வழிபட்டான் என்பது புராணம். ($)


நன்றிக்கடன் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்