திருவோத்தூர் எனும் செய்யாறு

பயணம் 

இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் முதல் நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 8 ஆம் நாள்  - 25/08/2019) நெடுங்குன்றம், மடம், தென்நாங்கூர், கூழமந்தல் ஆகிய இடங்களைப் பார்ததுவிட்டு மாலை செய்யாறை அடைந்தேன். விடுதியில் அறை எடுத்த பின் கோயிலுக்குச் சென்றேன். இரண்டாவது முறையாக 31/07/2022 அன்று சென்றிருந்தேன். இடையில் குடமுழுக்கு நடந்திருந்தது. இரண்டாவது பயணத்தில் எடுத்த படங்கள் @ என்று குறிக்கப்பட்டுள்ளன.

திருவோத்தூர் 

இது செய்யாற்றின் பழைய பெயர். 'ஓத்து' என்றால் வேதம், ஓதுதல் எனப்  பொருள்கள் உண்டு. 'மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்/ பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்' (பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளலாகும்) என்பது குறள் 134.  இக்கோயில் இறைவன் வேதங்களின் பொருளை தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் உபதேசித்தாராம். அதனால் இத்தலம் வேதபுரி எனப்  பெயர் கொண்டது. தமிழில்  திரு + ஓத்து + ஊர் (வேதபுரி). இறைவன் ஊர்ப் பெயரால் வேதபுரீசுவரர் (வேதபுரி+ஈசுவரர்) எனும் திருப்பெயர் பெற்றார். திருவோத்தூர் மருவி திருவத்திபுரம், திருவத்தூர் எனவும் மக்களிடையே வழங்குகிறது.

சிறப்புகள் 

வெளித் திருச்சுற்றில் கோயிலின் பெருமைகளை ஒரு பலகை தெரிவிக்கிறது.

தகவல் பலகை 

1. சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் விரிவாக்கப்பட்டக்  கோயில் 

2. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்கள் நான்குள் ஒன்று.

3. இறைவனை நோக்காமல் எதிர்திசை நோக்கும் நந்தி

4. தல விருட்சமான பனைமரம் 
  • பனைமரத்தை தல விருட்சமாக பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஐந்து. அவற்றுள் இரண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. மற்றது வன்பார்த்தான் பனங்காட்டூர்  எனும் திருப்பனங்காடு. (மற்ற மூன்று சோழ நாட்டு திருப்பனந்தாள், திருப்பனையூர், நடுநாட்டு புறவார் பனங்காட்டூர்) *
  • திருஞானசம்பந்தர் பாடல் பாடி ஆண் பனைகளை பெண் பனைகளாக மாற்றியது.  
  • இப்பனை மரங்களின் பழங்களை உண்டால்  குழந்தைப் பேறு   நிச்சயம் என்ற நம்பிக்கை.
  • திருச்சுற்று மண்டபத்தில் உள்ள பனைமரத்தின் சிற்பம், லிங்க, சம்பந்தர் சிற்பங்களுடன்.
5. நாகலிங்கம்
  • பீடத்தில் கீழிருந்து நிலமகள், மீன், ஆமை, 11 யானைகள், 11 நாகங்கள் தாங்க அதன் மேல் 11 தலை நாகம் படம் விரித்துள்ளது. அதன் உடல்சுருள்களால் அமைந்த பீடம் மீது சிவலிங்கம் உள்ளது.
  • சனிக்கிழமை ராகு காலத்தில் திருமுழுக்காட்டி வழிபட்டால் நாக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை.
6. இங்குள்ள பஞ்சபூத லிங்கங்களை வழிபடுவதால் பஞ்சபூதத் தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும்.

7. மகாமண்டபத்தில் ஓரிடத்தில் இருந்து சிவன்,முருகர், விநாயகர், அம்மன், கோபுரம், கொடிக்கம்பம், நவக்கிரகம் ஆகியவற்றின் காட்சி ஒருசேரக்  கிடைக்கும் அமைப்பு.

8. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தவிர்த்து அவர் பாடல் பெற்ற முருகர் இவர் மட்டுமே. #

9. சந்தானக் குரவர்கள் நால்வர் சிலைகள்.

கோபுரம் 

செய்யாறு ஆற்றின் வட கரையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆலயம் இது. அங்கு செல்லும் போது இருட்டிவிட்டது.  கோபுரத்தின் முன்னால் இருவரிசைகளில் கல் தூண்கள். தேவைப்படும்போது பந்தல் அமைத்துக்கொள்ள. ஆறு நிலை கோபுரம்.  கீழ்த்தளம் சிற்ப அணிகளற்ற கருங்கல் கட்டுமானம். மேல் தளங்கள் செங்கல் சுதையால.

செய்யாறு ராஜகோபுரம்@

வெளித் திருச்சுற்று

வெளி, உள் கோபுரங்களுக்கிடையில் நீண்ட மண்டபம், அதையடுத்து பலிபீடம், இறைவனுக்குப் புறம் காட்டும் நந்தி, கொடிமரம், அடுத்த திருச்சுற்றின் கோபுரம்.

இந்தத் திருச்சுற்றில் கல்யாணகோடி தீர்த்தம் எனும் குளமும், நூறு கால் மண்டபமும்  உள்ளன.

நடுத் திருச்சுற்று

உள் கோபுரத்தைக் கடந்தால்  மகா மண்டபம். இங்கிருந்து கோயிலின் சிறப்பாக மேலே கூறப்பட்ட ஓரிடத்திருந்து பல தெய்வக்  காட்சி.

வலதுபுறம் அம்மன் திருமுன் (சந்நிதி). இளமுலைநாயகி (பாலகுஜாம்பாள்). இடது பக்கம் கல் பனை. அதன் கீழ் சிவலிங்கம். அதை நோக்கிப் பாடும் திருஞானசம்பந்தர் சிலை.

திருஞானசம்பந்தர், வேதபுரீசுவரர், பனைமரம்@

நுழைவாயிலின் வடக்குப் பக்கம்

@

@

இந்த திருச்சுற்றின் தெற்கு பகுதியில் ஒரு அழகிய திருமுன் உள்ளது. அது அலங்கார இடமாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அர்ச்சகரை விசாரித்தபோது அது பெருமாள் சந்நிதியாக இருந்ததாகவும், பெருமாள் இப்போது கோயில் உள்ளே இருப்பதாகவும் கூறினார். (? ஆதிகேசவப் பெருமாள்)

பழைய பெருமாள் சன்னிதி@

இந்தத்  திருச்சுற்றின் மேற்கு (பின்புற) மதில் வெளிப்புறமாக சிறிது வளைந்துள்ளது.

வெளித் திருச்சுற்றில் வடமேற்குப் பகுதியில் தல மரமான பனைகள் உள்ளன.  பனையின் அடியில் ஒரு லிங்கமும் திருஞானசம்பந்தர் சிலையும் உள்ளன.

தல மரமான பனை மரம்@

திருச்சுற்றின் வடபுறம் பஞ்சபூதத் தலங்களின் இறைவர்கள் ஆன அண்ணாமலையார், காளத்தீசுவரர், ஏகாம்பரநாதர், ஜம்புகேசுவரர் சந்நிதிகள் உள்ளன.

உள் திருசுற்றின் வடக்கு பகுதியில் இருந்து இரு கோபுரங்கள், அம்மன் சன்னிதி, பஞ்ச பூத சன்னிதிகளில் இரண்டு.@


உள் வாயிலின் முன் உயர்ந்த மேடை. வட, தென் புறங்களில் படிகள். உள் சுற்றின் நுழைவாயிலின் தென் புறத்தில் விநாயகர், வடபுறத்தில் முருகர். உள்ளே முகமண்டபமும், வேதநாதரின் திருமுன்னும், உள் திருச்சுற்றும்.

உள் திருச்சுற்றும் திருமுன்னும் 

திருமுன்னைச் சுற்றி அதை ஒட்டாமல் சற்று விலகி உள் திருச்சுற்று அமைந்துள்ளது. இடையே உள்ள தாழ்ந்த தரைப் பகுதி திருமுன்னைச் சுற்றிய அகழி போல் உள்ளது. திருச்சுற்றின்  தென் சுவர் ஓரம் 63 நாயன்மார்களின் திருவுருவங்கள்.

உள் திருச்சுற்று - தென்புறம் 

உள் திருச்சுற்று உட்பக்கம் தூண்களாலும் வெளிப்பக்கம் சுவற்றாலும் தாங்கப்படுகிறது. தூண்கள் கீழிருந்து மேல்வரை உருளையாக உள்ளன (ஸ்ரீ ருத்திர காந்தம்). மேலே வெட்டுப் போதிகைகள். அவற்றின் மேல் உத்திரம், வாஜனத்தின் பிதுக்கம், மேலே சற்று வளைந்த வலபி. திருத்தமான, எளிமையான கட்டுமானம். போதிகைகளின் வெட்டுகளிலும் பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ள கோடுகள்தான் ஒரே வேலைப்பாடு. சோழர் கால  கட்டுமானம்.

இத்தூண்களை முக மண்டபத்து தூண்களுடன் ஒப்பிடலாம்:

முக மண்டபம் 

முக மண்டபத் தூண்கள் மூன்று சதுரங்கள், அவற்றிடையே இரு 16 பட்டைக் கட்டுகள், என்ற அமைப்பு கொண்டுள்ளன. பூ அலங்காரங்களுடன் உள்ள சித்திர போதிகை பூ மொட்டில் முடிந்து பூ மொட்டுப்   போதிகையாக உள்ளது. சதுரத்தின் அனைத்து முகங்களிலும் போதிகையின் பக்கங்களிலும் வட்ட வடிவத் தாமரைப் பதக்கங்கள். தாமரை பதக்கங்களின் நடுவில் குறுஞ்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

தவத்தில் அர்ஜுனனும் கிராதராக சிவன் பார்வதியுடன்@

கருவறையின் அமைப்பு

கருவறை உள்ளே தான்தோன்றி (சுயமபு) லிங்கம், சதுர ஆவுடையார்.

கருவறை அமைப்பு 

உபபீடத்தின் (துணைத்தளம்) மீது அமைந்துள்ள பாதபந்த அதிஷ்டானம் (தாங்குதளம்) உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புக்களைப் பெற்றுள்ளது. அதன் மேல் வேதிகை. இரு பக்கமும் அணைவுத் தூண்கள் பெற்ற தேவ கோட்டங்கள். கோட்டங்கள் மேல் தோரணங்கள் இல்லை.

கருவறையின் மூன்று பக்கங்கள், அர்த்த மண்டபத்தின் இரு பக்கங்கள் என பக்கத்திற்கு ஒன்றாக ஐந்து இறைக் கோட்டங்கள் உள்ளன.

கோட்ட இறைவர்கள்

தென்புறக்  கோட்டங்களில் நின்றநிலை விநாயகரும், ஆலமர்ச்செல்வனும் உள்ளனர்.

@

ஆலமர்ச்செல்வனின் பின் கைகள் நாகமும், முச்சூலமும் தாங்கியுள்ளன. முன் வலது கை சின் முத்திரை காட்ட இடது கை ஓலைச் சுவடிகளைத்  தாங்கியுள்ளது.  காலின் கீழே முயலகன்.



@

@

மேற்கு கோட்டத்தில் திருமால். பின் கைகள் ஆழியும், சங்கும்  தாங்கியுள்ளன. முன் வலது கை காப்பு (அபய) முத்திரை காட்ட இடது கை இடுப்பில் உள்ளது.

@

வடக்கு கோட்டங்களில் நான்முகனும், துர்க்கையும். நான்முகனின் பின் கைகளில் அக்க மாலையும், கமண்டலமும். முன் வலது கை காப்பு (அபய) முத்திரை காட்ட இடது கை இடுப்பில் உள்ளது.

@

திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் வலம்புரி விநாயர். 

வலம்புரி விநாயகர் 

வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகரும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளனர். முருகர் அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர்.

ஆறுமுகன்@

திருச்சுற்றின் வட பகுதியில் திருமாலின் சிலை ஒன்று கிழக்கு நோக்கி உள்ளது. பின் கைகள் செல் ஆழியும் (பிரயோக சக்கரம்), சங்கும்  தாங்கியுள்ளன. முன் வலது கை காப்பு (அபய) முத்திரை காட்ட இடது கை இடுப்பில் உள்ளது.

திருமால்

சைவ சமயச் சந்தானக் குறவர்கள் நால்வர். மெய்கண்டார், அருள்நந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம். குரு சீட வரிசையும் அதுவே. சைவ சித்தாந்த தத்துவ மரபைத் தோற்றுவித்து வளர்த்தவர்களும் அவர்களே. அந்த நால்வர்களின் சிலைகள் இங்கு அமைந்துள்ளது தனிச் சிறப்பு. $

சூரியன், சந்திரன், வீரபத்திரர், பைரவர், ஏழு கன்னியர் (சப்த மாதர்கள்) திருவுருக்களும்  உள்ளன. $

உள் திருசுற்றில் உள்ள பைரவர்@



கல்வெட்டுகள் 

சுவர்களில் கல்வெட்டுகள் 

இக்கோயிலில் இராசாதிராசன், 3ஆம் குலோத்துங்கன், இராசேந்திரன், விக்கிரம சோழன், ஆகியோர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.  கல்வெட்டுகளில் இறைவன் 'ஓத்தூர் உடைய நாயகர் எனக் குறிப்பிடப்படுகிறார்.^

கல்வெட்டுகள் கோயில் கட்டப்பட்ட காலத்தைப் பற்றி கீழ்கண்ட தகவல்களை அளிக்கின்றன.**
  • கருவறை, அரைநாழி மண்டபம் - சிம்ம வர்ம பல்லவன் காலம் 
  • பஞ்சபூத தல விமானங்கள் - பராந்தக சோழன் காலம் (கிபி 907 - 915)
  • அம்மன் சந்நிதி, முகப்பு மண்டபம் - ராஜராஜ சோழன் கால (கிபி 985 - 1014) நேரின்மை கொண்ட மாறவர்மன் காலம் 
  • சுற்றுவழி மண்டபம் இணைந்த முன் மண்டபம் - விக்கிரம சோழன் காலம் (கிபி 1118 - 1135)
  • கல்யாண மண்டபம் -  (சம்புவராயர் காலம் (கிபி 1268 - 1310)
  • ராஜகோபுர மதில், இரண்டாம் நிலை கோபுரம் - கிருஷ்ணதேவராயர் காலம் (கிபி 1509 - 1529)
  • நூற்றுக்கால் மண்டபம் - திருமலை நாயக்கர் காலம் (கிபி 1623 - 1659).
@

ஆமை விளக்கு@

நூறு கால் மண்டபத்தில் ஒரு தூண்@

அம்மன் சன்னிதி@

அம்மன் சன்னிதி@

அம்மன் சன்னிதி@


நன்றிக்கடன் 

https://temple.dinamalar.com/New.php?id=519

*https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/feb/நாக-தோஷம்-மற்றும்-சகல-தோஷங்களும்-விலக-வேதபுரீஸ்வரர்-கோவில்-திருவோத்தூர்

# thirupugazhtemples.blogspot.com

https://www.dharisanam.com/temples/sri-vedapureeswarar-temple-at-thiruvothoor-thiruvathipuram-cheyyar

^  https://shaivam.org/hindu-hub/temples/place/165/thiruvothur-vedapureeswarar-temple

** எறும்பூர் கை.  செல்வகுமார்; பாடல் பெற்ற தலங்கள்; திருவண்ணாமலை மாவட்டச் சிறப்புகள்  - திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு மலர் 2018.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்